Madras To Pondicherry (1966) Tamil Movie

மெல்லிசை மன்னர் ரி.கே.ராமமூர்த்தி அவர்களின் இனிய இசையமைப்பில் T.M.S, P.சுசீலாவின் குரல்களில் பிறந்த எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ, எங்கே பயணம் எங்கே…. பயணம் எங்கே பயணம் எங்கே, மலரைப்போன்ற பருவமே போன்ற அற்புதமான பாடல்களைக் கொண்ட படம்.

இப்படத்தைப்பற்றி ‘கலைநிலவு’ ரவிச்சந்திரன் அவர்களின்‘மதறாஸ் TO பாண்டிச்சேரி’ பட ஸ்பெஷல் ஆய்வுக்கட்டுரை. என்ற தலைப்பில் திரு.வாசுதேவன் அவர்கள்  http://www.mayyam.com/talk/showthread.php?11002 -இல் எழுதியுள்ள சுவாரஸ்யமான பகுதியை முழுமையாக இங்கே பிரசுரிக்கப்படுகிறது. நன்றி:- திரு.வாசுதேவன்

ரவிச்சந்திரன் அவர்களின் ‘காதலிக்க நேரமில்லை’ நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி ‘மதறாஸ் TO பாண்டிச்சேரி’ பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?… அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.

இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், ‘பக்கோடா’ காதர்’ (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக ‘கள்ளபார்ட்’ நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் (‘கட்டிலா தொட்டிலா’ திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். ‘கன்னடத்துப் பைங்கிளி’ சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.

ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘பாம்பே டு கோவா’ என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும் தழுவல் என்று நம்ப முடியாத வகையில் நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் ‘வெட வெட’ வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா ராணியும் செய்திருந்தார்கள்.

படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.

ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் “குய்யோ முய்யோ” என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து “பாம்.. பாம்”.. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி “அது ஒண்ணும் செய்யாது சாமி…கொழந்த மாதிரி” என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து “அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா” என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.

பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..

பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு “அம்மா பக்கோடா” என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் “அம்மா பக்கோடா” என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் ‘பக்கோடா’ காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)

இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.

சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).

கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்…படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை ‘சைட்’ அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் “ஏம்மா சும்மா கத்தற… பஸ்ஸு இரும்பு மாதிரி…பய காந்தம் மாதிரி…வந்து ஒட்டிக்குவான் பாரு” என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)

பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.

திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.

O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.

இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.

கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் “மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன” பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் “பயணம் எங்கே?… பயணம் எங்கே?” பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.

“என்ன வேலை என்ன தேவையோ..
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ…
பயணம் எங்கே?… பயணம் எங்கே?…
கோயில் பார்க்கவோ…
பாவம் தீர்க்கவோ…
சொத்து சேர்க்கவோ…
சுமையைத் தூக்கவோ”…

என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.

பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் “எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோனுதோ”…என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.

ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் “மலரைப் போன்ற பருவமே” பாடல் படு சூப்பர். (stop…listen…proceed… என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)

இயக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.

பயமும் சிரிப்பும் கலந்த பயணம்! – மதறாஸ் டு பாண்டிச்சேரி 50 ஆண்டுகள் நிறைவு

 Published: November 17, 2016 16:54 IST 

பிரதீப் மாதவன்

இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு நிம்மதியடைந்த அமெரிக்கர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு மாறினார்கள். அமெரிக்காவின் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றுலா சென்றுவருவதை சாகசமாகக் கருதிச் செய்தனர். இப்படிப் பயணங்களின் மீது அவர்கள் காட்டிய விருப்பம்தான் ‘ரோட் மூவி’ என்ற புதுவகை சினிமா உருவாகக் காரணம்.

‘போனி அண்ட் கிளைட்’(Bonnie and Clyde), ‘ஈஸி ரைடர்’(Easy Rider) ஆகிய இரண்டு முன்னோடிப் பயணத் திரைப்படங்கள் அமெரிக்காவுக்கு வெளியேயும் ‘ரோட் மூவி’களுக்குச் சாலை போட்டுக் கொடுத்தன. இவை சென்னையிலும் வெளியாகி ஓடின. இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த ‘ இஃப் இட்ஸ் டியூஸ்டே இட் மஸ்ட் பி பெல்ஜியம்’(If It’s Tuesday It Must Be Belgium) என்ற பயணத் திரைப்படம் சென்னையின் பிராட்வே, கெயிட்டி, சன் ஆகிய திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது.

இந்தப் படத்துக்கு தமிழ் ரசிகர்கள் நல்கிய ஆதரவினைக் கண்டு, உசிலை த. சோமநாதன் ‘மதறாஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தின் கதையை எழுதினாரா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்த் திரையின் முழுமையான பயணத் திரைப்படம் ஒன்றுக்கான கதை, வசனத்தை எழுதியவர் என்ற முறையில் தமிழ் சினிமா வரலாறு அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது.

பொதுவுடைமை எழுத்துக்காரர்

உசிலை சோமநாதன் உசிலம்பட்டியில் பிறந்து வளர்ந்தவர். 15 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் கலைக்குழுவில் இணைந்து நாடக நடிகராக வலம்வந்தார். 21 வயதில் பொதுவுடைமை நாடகங்களை எழுதத் தொடங்கினார். இவரது நாடகங்கள் பலவற்றுக்கு இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதாராஜன் இசையமைத்திருக்கிறார். தி.மு.க.வை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களைச் செய்த ம.பொ.சி. ‘எழுச்சிக் கடல்’ என்ற நாடகமொன்றை எழுதினார். அதற்காகத் துணிச்சலாகப் பேசும் இளம் நடிகர் ஒருவரைத் தேடி உசிலை சோமநாதனைக் கண்டுபிடித்தார்.

அந்த நாடகத்துக்கு எழுந்த எதிர்ப்பை மீறி அதில் நடித்துவந்த அவர், பிறகு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மதுரையிலிருந்து மதராஸ் வந்தார். அவரை இரட்டை இயக்குநர்கள் திருமலையும் மகாலிங்கமும் ஆதரித்தனர். நடிப்பதை நிறுத்திவிட்டுத் திரைப்படங்களைத் தயாரித்துவந்த நடிகர் பி.எஸ். வீரப்பாவும் இவருக்குக் கதை, வசனம் எழுத வாய்ப்புகளைத் தந்தார். மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் யதார்த்தமான நகைச்சுவைத் தருணங்களைத் தொட்டுக்கொண்டு தனது கதைகளில் நக்கலும் நையாண்டியும் கலந்த சமூக விமர்சனத்தையும் கதாபாத்திரங்கள் வழியே இடம்பெறச் செய்தார் சோமநாதன். ‘சாது மிரண்டால்’, ‘சோப்பு சீப்பு கண்ணாடி’, ‘பொண்ணு மாப்ளே’ எனப் பல படங்களில் இந்தத் தன்மையைக் காணலாம்.

‘மதராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தைத் தனது சிறப்பான படைப்பாக எழுதினார் அவர். ஒரு ‘பயணத் திரைப்பட’த்துக்கான இலக்கணத்தை மீறிவிடாமல், பேருந்தில் பயணிக்கும் மனிதர்களின் உலகம் எப்படிப்பட்டது என்பதைப் பயமும் நகைச்சுவையும் இரண்டறக் கலந்த அனுபவமாகத் தரவே, அந்தத் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிபெற்றது.

ஒரு பேருந்தும் அதன் பயணிகளும்

‘அன்பே சிவம்’, ‘பையா’, ‘நந்தலாலா’, ‘கண்டேன் காதலை’, ‘பத்து எண்றதுக்குள்ள’ என மிகக் குறைவான ‘பயணத் திரைப்பட’ங்களே முயற்சிக்கப்பட்டுள்ள தமிழ் சினிமாவில், ‘மதறாஸ் டூ பாண்டிச்சேரி’யின் கச்சிதம், ஒழுங்கு ஆகிய அம்சங்கள் இந்திய அளவில் முன்னோடிப் படங்களுள் ஒன்றாக அதை ஆக்குகின்றன. அந்த அளவுக்கு ப்ளாஷ்பேக் காட்சிகள் பேருந்துப் பயணம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பை மறக்கச் செய்துவிடாதபடி கச்சிதமான சிறுசிறு நறுக்குகளாக வந்து செல்லும்.

சினிமா நட்சத்திரம் ஆகும் ஆவலுடன் இருக்கிறாள் கதாநாயகி. அவளது செல்வச் செழுமை, அழகு ஆகியவற்றைக் காணும் ஏமாற்றுக் கும்பல் ஒன்று, அவளது சினிமா ஆசைக்கு மேலும் தூபம் போட்டு அவளிடமிருந்து பணத்தையும் நகைகளையும் அபகரிக்கிறது. கடைசி முறையாக அவளிடமிருந்து கறந்த பணத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் ஏமாற்றுக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சினை. அதில் ஏற்படும் மோதலில் ஒருவன் கொல்லப்பட, அதை நேரில் காணும் நாயகி, கயவர்களிடமிருந்து தப்பித்து சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் பேருந்து ஒன்றில் ஏறுகிறாள்.

விடாமல் துரத்தும் அந்தக் கும்பல், அவளைக் கொல்வதற்காகத் துப்பாக்கியுடன் ஒருவனை அதே பேருந்தில் அனுப்பி வைக்கிறது. தொடக்கம் முதலே நாயகியின் மேல் காதலுடன் பின்தொடரும் நாயகன் எதிர்பாராமல் தனது நண்பர்களுடன் அந்தப் பேருந்தில் ஏறுகிறான். பாண்டிச்சேரிக்குச் செல்லும் வழியில் இடையில் நின்று செல்லும் ஒவ்வொரு ஊரிலும் பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள்.

நாயகன் நாயகியைப் போலவே பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் முக்கியக் கதாபாத்திரங்களாக மின்னுகிறார்கள். பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் குணாதிசயங்கள் மூலம் 60-களின் சமூக, பொருளாதார வாழ்க்கையின் கண்ணாடியாக நகைச்சுவை மின்னல்கள் தெறிக்கப் படம் பயணிக்கிறது. கூடவே பயணிக்கும் கொலைகாரனிடமிருந்து நாயகி தப்பித்தாரா, நாயகனின் காதலை ஏற்றுக்கொண்டாரா என்பதுதான் கதை.

மின்னும் நட்சத்திரங்கள்

அழகும் துடிப்பும் கொண்ட மற்றொரு கதாநாயகனாக அறிமுகமான பி.எஸ். ரவிச்சந்திரனுக்கு (காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்) புகழைக் கொண்டுவந்த படங்களில் இதற்குப் பெரிய பங்கு இருக்கிறது. கன்னடத் திரையில் ‘மினுகு தாரா’ என்று புகழப்பட்ட கல்பனா, கொலைகாரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடும் பேருந்தில் ஏறும் கதாபாத்திரமாக நடித்து அசத்தியிருந்தார். கதாநாயகன் ரவிச்சந்திரனைவிட வில்லனாக நடித்த ‘கள்ளபார்ட்’ நடராஜன் அழகாகக் காட்சி அளித்தார்.

இந்த மூன்று முக்கிய வேடங்களைத் தாண்டிப் பேருந்து ஓட்டுநராக ஏ. கருணாநிதியும் நடத்துநராக நாகேஷும் அரங்கேற்றும் உயர்தரமான நகைச்சுவை இந்தப் படத்தை ஒரு பயண அனுபவமாக உணரச் செய்யக்கூடியது. இவர்களோடு பேருந்தில் பயணிக்கும் பிராமணப் பெண்ணாக மனோரமா காட்டும் பவிசான உடல்மொழியும் வாய்மொழியும் அவருக்கு இணை அவர்தான் எனக் கூறவைத்தது.

அவரது கணவராக நடித்தவர் ஏ. வீரப்பன். பின்னாட்களில் திரைப்படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகளை எழுதிப் புகழ்பெற்றவர். இவர்களின் ஒரே மகனாகப் பேருந்தில் பயணிக்கும் காதர், சக பயணிகள் சாப்பிடும் பகோடாவைப் பார்த்து தனக்கும் பகோடா வேண்டும் என்று கத்தி அடம்பிடிக்கும் காட்சிக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் அவர் பின்னாளில் ‘பகோடா’ காதர் என்று புகழப்பட்டார். இத்தனை நட்சத்திரங்கள் மின்னும் இந்தத் திரைப்படத்தை இயக்கிய நட்சத்திர இரட்டை இயக்குநர்கள் திருமலை -மகாலிங்கம் ஆகிய இருவரும் இயக்குநர் பீம்சிங்கிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்கள்.

தனது உதவியாளர்களைத் தட்டிக்கொடுத்து வளர்க்கும் விதமாக பீம்சிங் இந்தப் படத்தைத் தயாரித்தார். ‘மதறாஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தின் வெற்றியைக் கண்ட பாலிவுட்டின் அந்நாள் நகைச்சுவை நடிகரான மெகமூத் அதை ‘பாம்பே டூ கோவா’ என்ற பெயரில் இந்தியில் மறுஆக்கம் செய்தார். ரவிச்சந்திரன் ஏற்ற கதாநாயன் வேடத்துக்கு முதலில் அவர் அணுகியது அன்று இளைஞராக இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைத்தான். அவர் மறுத்துவிட அதன் பிறகு அமிதாப் நடித்தார்.

இசையும் தொழில்நுட்பமும்

டி.கே. ராமமூர்த்தி தனித்து இசையமைத்த படங்களில் ஒன்றான இது 1966-ம் ஆண்டு டிசம்பர் 16-ல் வெளியானது. கதையின் வேகத்தைக் கெடுத்துவிடாமல் கதையுடன் பயணிக்கும் நான்கு பாடல்களை மட்டுமே இயக்குநர்கள் பயன்படுத்தினார்கள். இந்தப் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக்காக அன்று மதராஸில் பிரபலமான போக்குவரத்து நிறுவனமாக இருந்த புரொவின்ஷியல் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் தனது‘பென்ஸ்’ ரகப் பேருந்து ஒன்றைக் கட்டணம் ஏதுமின்றிக் கொடுத்து உதவியது.

பேருந்தின் உள்ளே படமாக்கப்பட்ட காட்சிகள் வடபழனி விஜயா -வாஹினி ஸ்டூடியோவிலும் கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டூடியோவிலும் இரண்டு துண்டாக வெட்டியது போன்ற பேருந்து செட்டில் படமாக்கப்பட்டன. சாலையோரக் காட்சிகளைத் தனியே படம்பிடித்து வந்து அவற்றைப் பேருந்து செட்டின் பின்னால் உள்ள திரையில் ஓடவிட்டு, பேருந்தின் உள்ளே நடைபெறும் காட்சிகளைப் படமாக்கினார்கள். இப்படி நடிப்பு, இசை, தொழில்நுட்பம், இயக்கம் எல்லாவற்றையும் கடந்து இந்தப் படத்தின் எழுத்தே படத்தின் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது என்று சொல்லலாம்.

madras_3083479adesktop1_3083480f
Source:-http://tamil.thehindu.com/cinema/cinema-others/%81/article9357265.ece
ImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImageImage

3 comments on “Madras To Pondicherry (1966) Tamil Movie

  1. பாம்பே டூ கோவா தான் மெட்ராஸ் டு பாண்டிச்சேரியின் தழுவல்.
    தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஹிந்தி நடிகர் மெஹ்மூத் நாகேஷின் தீவிர நடிகர். அவர் பலமுறை 1966ல் வெளிவந்த மெட்ராஸ் டு பாண்டிச்சேரியை பார்த்து ரசித்து, அதை ஹிந்தியில் 1972ம் வருடம் பாம்பே டு கோவா என்று வெளியிட்டார். மெஹ்மூத் தான் தன் படமொன்றில் பாடலில் “முத்துக்குளிக்க வாரியளா” பாடல் வரிகளை அப்படியே உபயோகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  2. This movie is not a remake of the Hindi film Bombay to Goa.

    Madras to Pondicherry came first in 1966.It is the original.

    Bombay to Goa was released in 1972.

    • திரு.மணி நீங்கள் குறிப்பிட்ட திருத்தம் மிக மிகச் சரியானதே. எனினும் கட்டுரையை எழுதியவர் முன்னுக்குப் பின்னாக அதை எழுதிவிட்டார். அதனால் அதை அவ்வாறே பிரசுரிக்க வேண்டியதாகிவிட்டது. இனி இக்கட்டுரையப் படிப்பவர்கள் உங்கள் திருத்தத்தையும் கவனிக்கக்கூடும். அதுபோல் தமிழ்ப் படத்திலிருந்த ரசனையும், பாடல்களும் நாகேஷ் அவர்களும், ஏ.கருணாநிதி அவர்கள் அளித்த பங்களிப்பும் அவர்களிடம் காணக்கிடைக்கப்பெற்ற நடிப்பின் சிறப்பும் நிச்சயமாக இந்திப் படத்தில் இல்லவே இல்லை.

Leave a comment