Thavamani Devi-K

கே.தவமணி தேவி

பிரபல தமிழ் கவர்ச்சி நடிகை. இவர் தமிழ் நாட்டின் முதல் கவர்ச்சி நடிகை. பல இளம் வாலிபர்களை [தற்போதைய பெரிசுகளை] தன் பால் கவர்ந்திழுத்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சீனியர் பி.ஏ., பட்டம் பெற்றவர். பிறப்பில் இவர் சிங்களப் பெண்ணாக இருந்தாலும் 14 வயதிலேயே [1931] சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர்.

கர்நாடக சங்கீதத்தையும், பரத நாட்டியத்தையும் முறையாகப் பயின்றவர். இவரது சிறந்த குரல் வளத்திற்காக இலண்டன் பிபிசி., வானொலி இவருக்கு ‘நைட்டிங் கேர்ள்’ என்ற பட்டத்தைத் தந்துள்ளது.
இலங்கை, கண்டியில் இவர் வீட்டிற்கு அருகிலிருந்த பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது புகழ் பெற்ற ஆங்கில பட இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் அவருடைய அடுத்த தயாரிப்பான ‘சதி அகல்யா’ வுக்காக சின்ன வயசு கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்தார். அதே வேளை அவர் இலங்கைக்கும் வந்திருந்தார்.
’ஒரு விருந்தில் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, யாரோ இவரைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். இயக்குநர் தேடிக்கொண்டிருந்தது போலவே பரத நாட்டியம், முறைப்படியான சங்கீத ஞானம் , சினிமாவுக்கு ஏற்ற முக பாவனை எல்லாம் இவரிடம் இருந்தது.  அதனால் உடனே காரை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூட வாசலில் போய் நின்று கவனித்துள்ளார். டங்கனுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.  இவரை அழைத்து விலை உயர்ந்த சாக்லேட் ஒன்றைக் கொடுத்துவிட்டு, ‘சினிமாவில் நடிக்கிறாயா?’ என்று கேட்டுவிட்டார். இவருக்கோ பயமாகிவிட்டது. புதிதாக ஒருவர் வந்து, திடுதிப்பென்று ‘சினிமாவில் நடிக்கிறாயா’ என்று கேட்டால்? ‘தன் தந்தையிடம் வந்து கேட்குமாறு சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடி விட்டார்.
‘’மறுநாளே இவரது தாய்,தந்தையர் வீட்டிலிருக்கும் போது இயக்குநர் டங்கன் இவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் வந்த விஷயத்தைக் கூறினார். அதைக்கேட்ட இவரது அம்மா, ‘தாம் தூம்’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். மகளை நடிக்க வைக்க ஒரேயடியாக மறுத்துவிட்டார்.
’’ஆனா, சினிமா என்பது அந்த நேரத்தில் மிகப் பெரிய கனவுலகமாக இருந்தது. அதில் நடிக்கவேண்டுமென்பது இவரது ரொம்ப நாளைய ஆசை. அதனால் அப்பா பிள்ளையான இவர் அப்பாவிடம் ‘நைசாக’ பேசி அம்மாவிடம் சம்மதம் வாங்க வைத்தார்.
அப்படித்தான் இவருடைய சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. அந்த காலத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் இவருடைய கையைப் பிடிப்பதற்கே பயப்படுவார்கள். ஏனென்றால் இவரது தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர். அதனால்தான் அந்த பயம். ஆதலால் இவராகவே அவர்களது கையைப் பிடித்துக்கொள்வார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் போன்ற பெரிய நடிகர்கள் பலருடன் இவர் நடித்துள்ளார். 
இவ்வாறு நடித்துக்கொண்டிருந்தபோது ‘வன தேவதை’ படத்திற்காக இவரை ஒப்பந்தம் செய்தனர். அதில் இவர் காட்டுவாசிப் பெண். புலித்தோல் ஆடை [டூ பீஸ்] அணிந்துகொண்டு நடித்தார். படம் வெளிவந்த பிறகு பார்த்தால் அந்த உடை ரொம்ப கவர்ச்சியாகவும், செக்ஸியாகவும் இருந்தது. அதுவரை சினிமாவில் எல்லாரும் 16 முழம் சேலை முழுவதுமாக போர்த்தியபடிதான் நடிப்பார்கள். அதிலிருந்து இவரை எல்லோரும் ‘செக்ஸ் குயின்’ என்று பட்டம் சூட்டிவிட்டார்கள். ’’ஆனால் இத்தனைக்கும் அந்த உடை இடுப்புப் பகுதியும், கழுத்துப்பகுதியும்தான் தெரியும். அதற்கே அந்தக் காலத்தில் இப்படி பட்டம் சூட்டிவிட்டார்கள்.
இவர் 1940 களிலேயே ஒரு படத்திற்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் வாங்கியவர். இவரது காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதற்கே ஒரு படத்திற்கு சம்பளம் ரூ.4000/- மட்டுமே. இவர் ஒரு சொந்தப்படம் எடுத்தார். அது முடிவடையாமல் போனது. இந்த சமயத்தில் இவரது குடும்பத்தின் சாஸ்திரிகளாக இருந்தவரின் மகனான ‘கோடிலிங்க சாஸ்திரிகளுடன் இவருக்குக் காதல் உண்டானது.
அதற்குப்பின், 1956 இல் மதுரையில் வைத்து இவர்களுக்குத் திருமணம் நடந்தது. இரண்டு மகன்கள். பேரன் பேத்திகள் உள்ளனர்.
இவர் 10.2.2001 அன்று தனது 76 ஆவது வயதில் இராமேஸ்வரத்தில் வைத்து மரணமடைந்தார்.
இவர் நடித்த படங்கள்:-
சதி அகல்யா, வித்யாபதி, சகுந்தலை, ஆரவல்லி சூரவல்லி, வேதவதி [சீதா ஜனனம்], வனமோகினி, நாட்டிய ராணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, பக்த காளத்தி, ஷியாம் சுந்தர்.
தினமலர் தீபாவளி மலர் 1997 இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

கே.தவமணி தேவி சிறுபிராயத்தில்

K.Thavamani Devi-

வயதான காலத்தில் கணவர் கோடிலிங்க சங்கர சாஸ்திரியுடன் தவமணி தேவிK.Thavamani Devi-1

பெற்றோருடன் தவமணி தேவி

K.Thavamani Devi-2

படங்கள் உதவி: தினமலர் தீபாவளி மலர் 1997.

’’ராஜகுமாரி’’ [1947] படத்தில் கே.தவமணி தேவி

K.Thavamaini Devi-Rajakumari 1947- K.Thavamaini Devi-Rajakumari 1947-1 K.Thavamaini Devi-Rajakumari 1947-2 K.Thavamaini Devi-Rajakumari 1947-3 K.Thavamaini Devi-Rajakumari 1947-4 K.Thavamaini Devi-Rajakumari 1947-5

’’ராஜகுமாரி’’ [1947] படத்தில் ரி.எஸ்.பாலையாவுடன் கே.தவமணி தேவிK.Thavamaini Devi-TS.BALAIAH-Rajakumari 1947- K.Thavamaini Devi-TS.BALAIAH-Rajakumari 1947-1 K.Thavamaini Devi-TS.BALAIAH-Rajakumari 1947-2K.Thavamani devi Dinamalar Deepavali Malar 1997(1)

12 comments on “Thavamani Devi-K

  1. முதன் முதலில் தமிழில் கவர்ச்சி நடிகை என்ற பட்டத்திற்கு சொந்தகாரர்

  2. சதி அகல்யா
    மார்டன் தியேட்டர்ஸாரின் முதல் படம். பின்னாட்களில் அவர்கள் ஆங்கிலப் படங்களின் இன்ஸ்பிரேசனில் பல படங்கள் தயாரித்தனர். இந்தப் படம் ராமாயான அகலிகை கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்திரன் மேல் ஆசை கொண்டதற்க்காக அகலிகையின் கணவர் அவளை கல்லாக மாறும்படி சபிக்கிறார். பின் ராமன் கால் பட்டதும் சாப விமோசனம் பெறுகிறாள். அகலிகையின் கேரக்டரில் நடித்தவர் தவமணி தேவி. இவர் தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி ஆவார். இந்தப் படத்திற்க்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொடுக்கப்பட்ட தவமணியின் படங்களைப் பார்த்து அனைவரும் மெய்மறந்தனர். நீச்சல் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார் தவமணி. இதுவே படத்துக்கு பெரும் விளம்பரமாக அமைந்தது. பட வெற்றிக்கு கேட்க வேண்டுமா?

    பிரபல தமிழ் சினிமா ஆராய்ச்சியாளர் மற்றும் இலக்கியவாதியான திரு விட்டல் ராவ் எழுதிய “தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்” என்னும் நூல். 1930களில் தொடங்கி 1950 வரையிலான தமிழ் படங்களைப் பற்றி மிக நுட்பமாக இதில் விவரித்து எழுதியுள்ளார்.

    தகவல் தந்து உதவியர் இணைய நண்பர் முரளி கண்ணன்

    • உங்கள் நண்பர் முரளி கண்ணன் அவர்களுக்கு எனது நன்றி.

  3. சதி அகல்யா வெற்றிக்குப் பின் தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வனமோகினி. இந்தத் திரைப்படம் 1940 இல் வெளிவந்தது. கொலிவூட்டில் டோர்தி லமோர் நடித்துப் பிரபல்யமான யங்கிள் என்ற திரைப்படத்தினையே தமிழில் வனமோகினி என்று எடுத்தார்கள். இதில் வனமோகினியாக ஆங்கிலத்தில் டோர்தி லமோர் உடுத்த கவாய் நாட்டுப் பாணியிலான உடையை இடுப்பில் கட்டி இவர் நடித்திருந்தார். இவர் தனது நடிப்போடு காற்றில் ஆடும் சிறு உடையின் மத்தியில் தனது உடல் அழகையும் காட்டிக் கொண்டது அன்றைய கால கட்டத்தில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். இவரது இந்தத் திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் பெரு வெற்றியையும் ஈட்டிக் கொண்டது. அறுபது வருடங்கள் கழிந்தாலும் தென்னகத் திரையுலகில் இன்னமும் வனமோகினி பேசப்படுகிறதென்றால் அன்றைய காலகட்டத்தில் வனமோகினி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

    1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.

    தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,

    அதோ இரண்டு Black eyes!
    என்னைப் பார்த்து Once, twice!
    கண்ணைச் சிமிட்டி Dolly!
    கை கட்டி Calls me!
    Is it true your eyes are blue?
    I’ll fall in love with you!
    I will dance for you!

    இந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் ஏ.ரி.கிருஸ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

    Remembered for the interesting storyline, witty dialogue, fine song and dance numbers and Thavamani’s exciting screen presence.(From Randor kai about vidyapathi)

    இவர் நடித்து பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்த அடுத்த திரைப்படம் 1948இல் வெளியான ராஜகுமாரி. இந்தத் திரைப்படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி இயக்கியிருந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பில்தான் ஏ.எஸ்.ஏ.சாமி தனது படிப்பினை முடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பின்னாளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்று. ராஜகுமாரி திரைப்படத்தையும் யூபிட்டர் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஒரு பெருமையிருக்கிறது. பின்னாளில் தமிழகத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஆண்ட மூன்று தமிழக முதலமைச்சர்களின் திரையுலகப் பிரவேசம் இந்த நிறுவனத்தினூடாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 1949இல் வெளியான யூபிட்டர் நிறுவனத்தின் வேலைக்காரி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார். யூபிட்டரின் ராஜகுமாரி திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். அதில் முதன் முதலாக எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

    தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சான்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே இவரின் திரையுலகப் பிரவேசமாக அமைந்தது.

    ராஜகுமாரி திரைப்படத்தில் தவமணி தேவி உடுத்தியிருந்த ஆடை பெரும் கவர்ச்சியாக இருந்ததால் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலேயே இவருக்கும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் இடையில் பெரும் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற தவமணி தேவியின் சில காட்சிகள் தணிக்கைக் குழுவின் கத்தரிக்கு இரையானது. ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிய போது அதில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆரின் புகழை மேலும் உச்சிக்குக் கொண்டு போனது. அதன் கதை வசன கர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சிறந்த வசன கர்த்தா என்னும் ஒரு அங்கீகாரத்தையும் தந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் வெற்றி தவமணி தேவிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இந்தத் திரைப்படத்தின் பின்னர் அவரது திரையுலக வரலாறு இறங்கு முகமாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இவரில் பெரும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியது.

    இந்த நிலையில் தவமணி தேவி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரியை காதலித்து மணந்து கொண்டார். திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேஸ்வரத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்த தவமணி தேவி அவர்கள் தனது 76வது வயதில் 10.02.2001இல் காலமானார்.

    1990களில் அதாவது திரைப்படத்துறையை விட்டு தவமணிதேவி அவர்கள் வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல வார இதழ் தவமணி தேவியைப் பற்றி இப்படி எழுதியிருந்தது.

    ´சுதந்திரத்திற்கு முன் தமிழ்த் திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்திலிருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப்பட இரசிகர்கள் அந்த புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர், அதிசயித்தனர், பரவசப்பட்டுப் போயினர். படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தச் செய்ய ஆவலாக இருந்தனர். ´

    thanks to Ramnaddotcom.blogspot.in
    https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTqYXgW4kgnhkA86j1c2sZvZ5isP67cM7iQHeFMht5cxlkTL9yw

    • ஏராளமான விடயங்களைத் திரட்டித்தந்துள்ளீர்கள் கணபதி கிருஷ்ணன். மிக்க நன்றி.

  4. கே. தவமணி தேவி சிங்களப் பெண் அல்ல. இலங்கைத் தமிழ்ப் பெண். இவரது தந்தையார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இசை நடனம் கற்பதற்காக தமிழ் நாடு வந்த இடத்தில் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். இவரைப் பற்றிய முழு தகவல்களையும் படிக்க: https://ta.wikipedia.org/s/dqm
    தயவு செய்து தவறான தகவலைத் தரவேண்டாம்.

    • உங்கள் கருத்துக்கு நன்றி. தவறான தகவல் தரவேண்டும் என்பது இவ்வலைப்பூவின் நோக்கமல்ல. கே.தவமணி தேவியின் தந்தை தான் தமிழர். தாயார் சிங்களப் பெண்மணி. சிங்களப் பெண் என்று குறிப்பிடப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. அதனைக் கொண்டுதான் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை கட்டுரையின் கீழ்ப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்குமே! பார்க்கவில்லையா?

  5. தவமணிதேவியில் தாய் சிங்களப் பெண் என்பதற்கு ஆதாரம் இல்லை, அப்படி இருந்தால் அதனை நீங்கள் பதிவிடவேண்டும். நடிகை ராதிகாவின் தாயாரும் சிங்களப் பெண்தான். அதற்காக ராதிகாவை சிங்களப் பெண் என்று கூறுகிறோமா? மேலும், கண்டி நகரில் வைத்து டங்கன் சாக்லேட் கொடுத்து படத்தில் நடிக்க வருமாறு அழைத்ததாக எழுதப்பட்டுள்ளது. அவர் கண்டி நகரில் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (தினமணி போன்ற பத்திரிகைகள் சினிமா செய்திகளைப் பொறுத்தவரை விற்பனையைக் கருத்தில் கொண்டு எழுதுகின்றன. ஆதாரங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. இப்பத்திரிகைகள் மேற்கோள் காட்டுவதும் கிடையாது.)
    தமிழ் சினிமா வரலாற்றில் Randor Guy தான் சரியான தகவல்களைத் தந்துள்ளார். அவர் வனமோகினி பற்றி The Hindu பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் தவமணிதேவி பற்றி விபரம் கூறியுள்ளார். (http://www.thehindu.com/features/cinema/article2057112.ece)
    அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் இலங்கையை சிங்களம் என்றுதான் குறிப்பிட்டார்கள் (பாரதியார் – சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்). அதனால் தவமணிதேவியை “சிங்களத்துக் குயில்” என அழைத்தார்கள். பின்னாளில் தான் சிலோன் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள். (சிலோன் மனோகரன், சிலோன் விஜயேந்திரன்).
    தவமணிதேவி பெற்றோர்களாலேயே சென்னைக்கு இசை, நடனம் கற்றுக் கொள்ள அனுப்பப்பட்டார். பரத நாட்டியம், கருநாடக இசை என்பவற்றில் அவரது திறமை காரணமாகவே சினிமாவிற்கு அழைக்கப்பட்டார்.
    சதி அகல்யா படத்தில் நடிக்க டங்கன் சாக்லெட் கொடுத்து அழைத்ததாக எழுதப்பட்டுள்ளது. இது தினமலர் தீபாவளி மலரில் வந்ததா என்பது தெரியவில்லை. வந்திருந்தால் இதுவே அவர்கள் ஆதாரம் பற்றிக் கவலைப் படாதவர்கள் என்பதைக் காட்டும்.
    சதி அகல்யா மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த முதலாவது படம். அதன் டைரக்டர் டி. ஆர். சுந்தரம். இந்தப் படத்தில் தான் தவமணிதேவி முதலில் நடித்தார். பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸாரின் ராஜகுமாரி படத்தில் எம். ஜி. ஆரோடு நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தகவலுக்காக எழுதுகிறேன். தவறான தகவலைக் கொடுக்க வேண்டாம் என்பது குற்றம் காண்பதற்காக அல்ல. படிப்பவர்களுக்குச் சரியான தகவல் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே.
    நன்றி. வணக்கம்.

  6. அன்புள்ள இசைத்தேனீ …… இங்கு தாங்கள் கொடுத்துள்ள நீண்ட விளக்கத்திற்கும், ஓர் தவறு நடந்துவிடக்கூடாது என்பதில் தாங்கள் கொண்டிருக்கும் அக்கறைக்கும், பழைய நடிகர், நடிகையர்களின்பால் தாங்கள் கொண்டிருக்கும் அதீத ஆர்வத்திற்கும், அபிமானத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். தாங்கள் கொடுத்துள்ள விளக்கங்களின் இணைப்பே இங்கு போதுமானதென்று நினைக்கிறேன். இதற்குப் பின்னும் ஒரு திருத்தம் தேவையில்லையென்றும் நினைக்கிறேன்.

    தாங்கள் கேட்டுக்கொண்டபடி தினமலர் தீபாவளி மலர் 1997-இன் பக்கங்களை இணைத்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டும் அதிலுள்ளது. இதற்கு மேலும் என்ன செய்வது?

  7. நன்றி சகாதேவன் விஜயகுமார்
    தினமலர் இணைப்பை என்னால் படிக்க முடியவில்லை. ஃபான்ட் பிரச்சனை. பரவாயில்லை. இது போதும். உங்கள் நல்ல பணியைத் தொடருங்கள். பழைய தமிழ் திரைஉலகு தொடர்பான தகவல்களுக்கு Randor Guy என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டுப் பிரசுரித்தால் நல்லது. The Hindu பத்திரிக்கையில் Blast from the Past என்று தேடிப் பார்த்தால் பல தகவல்கள் கிடைக்கும். நன்றி. வணக்கம்.

Leave a comment