“Judo” K.K.Rathnam

”ஜீடோ” கே.கே.ரெத்தினம் – சண்டைப் பயிற்சி இயக்குநர்

ஜூடோ முதலில் அதிலே எல்லாம் நாட்டம் இல்லாதவராகத்தான் இருந்திருக்கிறார். ஒரு சமயம் குடியாத்தம் திருமகள் மில்லிலே வேலைக்கு ஆள் எடுக்கும்போது இவரும் சென்றிருக்கிறார். மேலாளர் வர்க்கீஸ் என்பவர் இவரைப் பார்த்து இந்தப் பையன் நோஞ்சானாக இருக்கிறானே…. இரவுப் பணிக்கு இவன் ஒத்து வருவானா என்று கேட்டுவிட்டார். அவர் அப்படி கேட்டது இவருக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் போய்விட்டது. அப்போதுதான் இவருக்கு உடம்பைப் பற்றி எண்ணமே முதன் முதலாக ஏற்பட்டது.

உடனே ‘மகாபாரதம்’ மாசிலாமணி என்பவரிடம் போய் தேகப் பயிற்சி பெறத்துவங்கினார். செய்யச் செய்ய ஒரு வெறியேற்பட்டது. அதோடு விடாமல் தென்னிந்திய பாக்ஸிங் சாம்பியன் பரமசிவனிடம் போய் பயிற்சி எடுத்துக்கொண்டார். பிறகு ஜி.ராமு என்பவரிடம் ‘ஜூடோ’ பயிற்சி பெற்றார். சோவியத் நாட்டுப் பயிற்சி பெற்ற ரங்கனாதனிடம் உருட்டுத் திரட்டிக் காட்டுகிற பயிற்சியும் எடுத்துக்கொண்டார். இதெல்லாம் போதாதென்று தங்கவேலுவிடம் யோகாசனப் பயிற்சியும் பெற்றார்.

இவர் நேரடியாக ஸ்டண்ட் மாஸ்டராக சினிமாவில் புகுந்துவிடவில்லை. ஒரு நாள் வட ஆற்காடு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒரு விழாவிலே உடற்பயிற்சிகளைச் செய்து காட்டிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு முகவை ராஜமாணிக்கமும் வந்திருந்தார். இந்த அளவுக்கு உங்கிட்டே திறமை இருக்கு. வித்தை இருக்கு. நீ ஏன் இங்கே இருக்கணும்? என்னோட சென்னைக்கு வா’ என்று அழைத்து வந்து, அவர் கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த ‘தாமரைக் குளம்’ படத்திலே நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு இவரை டூப் போட வைத்திருக்கிறார். இது தான் இவரது முதல் படம். பிறகு விட்டலாச்சாரியார் படங்களில் என்.ரி.ராமராவுக்காகக் கூட டூப் போட்டு நடித்திருக்கிறார்.

மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வல்லவன் ஒருவன்’ தான் இவரை முதன் முதலாக ஸ்டண்ட் மாஸ்டராக மாற்றிய படம். எனக்கு மாஸ்டர் என்ற அந்தஸ்தை இந்தப் படத்தின் மூலமாக இவருக்கு வழங்கியவர் மாடர்ன் தியேட்டர்ஸின் அதிபர் ரி.ஆர்.சுந்தரம் அவர்கள். இவரது தொழில் திறமையில் அந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் அவருக்கு இருந்தது.

இவர் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய ‘வல்லவன் ஒருவன்’ படத்தில் ஜெய்சங்கர்-மனோகர் ஆகியோருக்காக ஜூடோ முறையில் ஒரு சண்டைக் காட்சியை அமைந்திருந்தார். அந்தச் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கி மிகுந்த வரவேற்பை இவருக்குப் பெற்று தந்தது. இதைக் கருதி தமிழ்க் கலை, இலக்கிய மன்றம் இவருக்கு ‘ஜூடோ’ என்ற பட்டத்தை வழங்கியது. ரசிகர்கள் இவரது திறமையை மெச்சிக் கொடுத்த இந்தப் பட்டத்தை என்றென்றும் இவரது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்ள வேண்டுமென்று இவர் ஜூடோ ரெத்தினமாகிவிட்டார்.

இவர் ஒரு ஆங்கில படம் உட்பட தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற 9 மொழி படங்களில் 1200-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் சண்டைக்காட்சி அமைத்து பெயர் வாங்கிய படங்களில் சில:-

தங்கக்கோபுரம், வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், கைதி கண்ணாயிரம், மாடி வீட்டு மாப்பிள்ளை, சகலகலா வல்லவன், பாயும் புலி, சிவப்புச் சூரியன், முரட்டுக் காளை, காயத்ரி, தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, திருப்பம், தூங்காதே தம்பி தூங்காதே.

ஜூடோ ரெத்தினம் 8.8.1930-இல் பிறந்தவர். தற்போது வயது 85. இவரது மகன் ஜூடோ ராமு.

காணொளியில் இவரது நேர்காணலைக் காண சொடுக்குங்கள்:-        https://www.youtube.com/watch?v=diMXUCqDbhs

1.9.1983 சினிமா எக்ஸ்பிரஸ் திரையிதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

ஜூடோ கே.கே.ரெத்தினம் [1983]          Judo Rathinam-

சில்க் ஸ்மிதாவுடன் ஜூடோ ரெத்தினம்Silk Smitha-Judo Rathinam-

மாடி வீட்டு மாப்பிள்ளை  [1967] படத்தலைப்புMaadi Veettu Mappillai 1967-3

விருந்தினர் பக்கம் நேர்காணல் நிகழ்ச்சியில் ஜூடோ ரெத்தினம்Stunt Master  Judo Rathnam  -Virundhinar Pakkam Dt 11-04-14 Stunt Master  Judo Rathnam  -Virundhinar Pakkam Dt 11-04-14-1 Stunt Master  Judo Rathnam  -Virundhinar Pakkam Dt 11-04-14-2

”பொண்ணுக்கேத்த புருஷ்ன்” 1992 படத்தில் ராமராஜனுடன் ஜூடோ ரத்தினம்Judo Rathnam [Stunt Master]-Ponnukethapurusan 1992-Judo Rathnam [Stunt Master]-Ponnukethapurusan 1992-1Judo Rathnam [Stunt Master]-Ramarajan-Ponnukethapurusan 1992-

7 comments on ““Judo” K.K.Rathnam

  1. தாமரைக்குளம் முதல் தலைநகரம் வரை என்ற புத்தகம் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது

  2. சென்னை, ஜூன்.2 – கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். ஜூடோ கே.கே.ரத்தினம் தாமரைக்குளம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த கொஞ்சும்குமரி படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் ஆனார்.

    தொடர்ந்த 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். 63 கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து உள்ள இவர், கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆசியாவிலும் சரி, இந்தியாவிலும் சரி, யாரும் 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தது இல்லை. குறிப்பாக ரஜினி நடித்த முரட்டுக்களை படத்தில் இடம் பெற்ற ரயில் சண்டை காட்சி இவரை பேச வைத்தது. இவரது சாதனைகள் மேலும் தொடர்ந்தது.

    சமீபத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக அறிமுகம் ஆன தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்தார். இவரது சாதனையை பாராட்டி, ராயல் அக்ரே டெய்ரி லிமிடெட் நிறுவனம் சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

    இந்த விழாரில் ஏ.வி.எம்.சரவணன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு, வாழ்நாள் சாதனை விருதை ஸ்டண்ட் மாஸ்டர் கே.கே.ரத்தினத்திற்கு வழங்கினார்கள். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் எழுதிய தாமரைக்குளம் டூ தலைநகரம் என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

    ஜூடோ கே.கே.ரத்தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கு கலைமாமணி விருது இதுவரை வழங்கப்படல்லை என்றும், தனக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நன்றி தினபூமி நாள் இதழ்

  3. பிரபல் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்த பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் தயாரித்த படம் “ஒத்தையடிப்பாதையிலே”

  4. பல விவரங்கள், பல தகவல்கள், அருமை அருமை கணபதி கிருஷ்ணன். முதல் தகவலில் உள்ள விவரங்களில் ‘கொஞ்சும் குமரி’ படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறு. கொஞ்சும் குமரி அவர் மாடர்ன் தியேட்டர்ஸில் நடிகராக அறிமுகமான படம். இந்தப் படத்தில் அவரது சாகஸங்களைக் கவனித்த இயக்குநர் ரி.ஆர்.சுந்தரம் அவர்கள் வல்லவன் ஒருவன் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் செய்தார்.

  5. “ஒத்தையடிப்பாதையிலே” இவர் தயாரித்த படம் என்பது நான் அறிந்திராத தகவல். இந்தப் படம் சரியாக ஓடியதா அல்லது வெற்றிப்படமானதா கணபதி கிருஷ்ணன்? பாடல்கள் நன்றாக இருக்கும் அல்லவா?

  6. நண்பர் சகாதேவன் விஜயகுமார்
    உங்கள் பாராட்டுக்கும் மற்றும் கொஞ்சும் குமரி பற்றிய திருத்திய தகவலுக்கும் நன்றி. ‘ஓத்தையடி பாதையிலே’ படத்தின் பாடல்களில் பிரபலமான ஒன்று யேசுதாஸ் அவர்களின் குரலில் ‘ ஏய் உன்னைத்தான் உன்னைத்தான் செப்புக்குடம் தூக்கி போகும் செல்லம்மா. நான் விக்கி போறேன் தாகத்திலே நில்லம்மா ” அந்நாளைய இலங்கை வானொலி நிலையத்தில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். படம் மிக பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது.

  7. தகவலுக்கும் காணொளிக்கும் நன்றி கணபதி கிருஷ்ணன். நீங்கள் சொன்னதைப் போல இலங்கை வானொலியில் கணக்கில்லாமல் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன் இப்பாடலை.

Leave a comment