O.A.K.தேவர்– பழம்பெரும் நடிகர். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என சகலவிதமான பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர். மாமன் மகள் படத்தின் மூலம் அறிமுகமானார். மூன்றெழுத்து, நீயும் நானும், மகேஸ்வரி, உத்தம புத்திரன், எதிர் நீச்சல், தங்கச்சுரங்கம், பொற்சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன், சாது மிரண்டால், புதிய பறவை, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, வீரக்கனல், குறவஞ்சி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மகாதேவி, தாய்க்குப் பின் தாரம், உலகம் இவ்வளவு தான், வாழையடி வாழை, கர்ணன்,ராமன் தேடிய சீதை, நான் ஆணையிட்டால், விக்கிரமாதித்தன்,பறக்கும் பாவை, கண்ணன் என் காதலன்,ராமு, பட்டத்து ராணி,கங்கா கௌரி, கங்கா, பூக்காரி, அன்பு வழி , நான் யார் தெரியுமா, ஆதிபராசக்தி, பாக்தாத் பேரழகி [இவரது மரணத்திற்குப் பின் இப்படம் வெளிவந்தது.] போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கனத்த சாரீரமும், பருத்த உடல்வாகும், வளமான உச்சரிப்பும் கொண்டவர்.இவர் தனது 49-வது வயதில் காலமாகிவிட்டார்.இவரது மனைவி செல்லம் என்பவரும் நடிகையாவார். இவரது மகன் ஓ.ஏ.கே.சுந்தர் தற்போது திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார்.
மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! – ஓ.ஏ.கே. தேவர் என்ற தலைப்பில் தி இந்து தமிழ் நாளிதழில் 1.4.2016 அன்று வெளியாகியுள்ள அருமையான கட்டுரை.
ஆர்.சி. ஜெயந்தன்
‘மகாதேவி’ படத்தில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் கருப்புத் தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.
இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.
தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.
சக்தி நாடக சபாவின் மாணவர்
திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா’வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.
‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.
‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.
நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்ஸ்
சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.
நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.
இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.
மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.
ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.
பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.
கைகொடுத்த கலைவாணர்
திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.
அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.
அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.
“வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ஓ.ஏ.கே.தேவர். அவரது அடையாளம் வில்லன் நடிப்பு மட்டும்தானா? அவரது திரையுலகப் பயணத்தின் சுவடுகள் நிறைவுப் பகுதியாக அடுத்த வாரம்.
http://tamil.thehindu.com/cinema/cinema-others/article8421999.ece
மறக்கப்பட்ட நடிகர்கள் 4: இருபெரும் நடிகர்களின் ஒரே தேர்வு! – ஓ.ஏ.கே. தேவர் 2
Published: April 8, 2016 11:04 IST Updated: April 8, 2016 11:04 IST
ராமு படத்தில் வி.கே.ராமசாமி, அசோகனுடன் ஓ.ஏ.கே.தேவர்
ஆர்.சி. ஜெயந்தன்
மேற்கத்திய கௌபாய் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவில் கௌபாய் ஜுரம் பரவிய 70-களின் காலகட்டம். கௌபாய் கதாநாயகனுக்கான இடத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டவர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்’ எனப் புகழப்பட்ட ஜெய்சங்கர். கௌபாய் கதாநாயகனுக்கு சரியான சவாலாக அமையும் வில்லன் கிடைக்காவிட்டால், இந்த வகைப் படங்களுக்கே மவுசு கிடைத்திருக்காது. அந்தச் சவாலான இடத்தை நிரப்பியவர் ஓ.ஏ.கே. தேவர். ஜெய்சங்கரின் ‘கங்கா’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவர்களில் ஒருவராக வந்து “அந்தக் கடவுளுக்கே நாங்க பயப்பட மாட்டோம்” என்று பகுத்தறிவு வசனம் பேசி நடித்தவர், கலைவாணர் மீது கொண்ட ஈடுபாட்டால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கௌபாய் படங்களில் ஜெய்சங்கருக்கு உச்சமாக அமைந்த படம் ‘சி.ஐ.டி சங்கர்’. படம் தொடங்கியதும் வில்லனின் நிழல் உருவத்தையும் அந்த மிரட்டலான குரலையும் கண்டு மிரள ஆரம்பித்த ரசிகர்கள், யாரந்த வில்லன் என்று முகத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்த காட்சிகளில் பார்த்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தவர்களை அந்தக் குரல் மட்டுமே மிரட்டிக்கொண்டிருக்கும். படத்தின் இறுதிக் கட்டக் காட்சியில் வில்லனாகத் தோன்றினார் ஓ.ஏ.கே.தேவர். மிகவும் பிரபலமான தனது குரலை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு மாற்றிப் பேசிக் கதிகலங்க வைத்தார்.
அப்படிப்பட்டவர் ‘பூக்காரி’, ‘பட்டத்து ராணி’, ‘கங்கா கௌரி’ ‘நீயும் நானும்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ உட்பட பல படங்களில் வில்லன் அல்லாத மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தன் மீது படிந்த வில்லன் பிம்பத்தை மறக்கச்செய்தார். ‘சாது மிரண்டால்’ படத்தின் முதல் பாதி முழுவதும் ஆறு தோற்றங்களில் வரும் தேவர், இரண்டாம் பாதி முழுவதும் உறைந்த விழிகளோடு பிணமாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.
சமூகப் படங்களில் சாதனைகள் படைத்த கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எல்லாப் படங்களிலும் இவர் தவறாமல் இடம்பெற்றுவிடுவார். கே.எஸ்.ஜி.யின் ‘குறத்தி மகன்’ படத்தில் கருத்து சொல்லும் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு அல்ல; தேவருக்குத்தான். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் விபீஷணனாக நடித்துக் கண் கலங்கவைத்தவர், அதே ஆண்டில் வெளியான ‘விக்கிரமாதித்தியன்’ படத்தில் கதிகலங்க வைக்கும் மந்திரவாதியாக நடித்திருப்பார். எல்லா ஒப்பனைகளும் ஆடைகளும் பொருந்தக்கூடிய தோற்றம் கொண்ட கலைஞராக ஓ.ஏ.கே. தேவர் விளங்கினார்.
சிவாஜிக்கே சவால்
வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் உட்பட சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர் ஓ.ஏ.கே. தேவர். சிவாஜியுடன் நாடகங்களில் நடிக்கும்போது அடுத்த காட்சிக்கான ஆடையை மாற்ற மேடைக்குப் பின்புறமிருக்கும் ஒப்பனை அறைக்குச் செல்ல மாட்டாராம் சிவாஜி. மேடையின் பக்கவாட்டில் இருக்கும் மறைவான இடத்தில் நின்று தேவரின் நடிப்பைக் கவனித்துக்கொண்டே இருப்பாராம். “ஓ.ஏ.கே. கிட்ட கவனமா இருக்கனும்; எக்ஸ்ட்ரா டயாலாக் போட்டுக் கைதட்டல் வாங்கிடுவான். அடுத்த சீன்ல அதைவிட அதிகமா க்ளைப்ஸ் வாங்கணும்” என்று சிவாஜி பதற்றமடைவர் என குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார் வானொலியாளர் கூத்தபிரான்.
தலைமுறைகளைக் கடந்து இன்றும் கொண்டாடப்படும் ‘கர்ணன்’ படத்தில், கனக மகாராஜாவாக நடித்திருப்பார் ஓ.ஏ.கே. தேவர். தனது மருமகனான கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்று தெரிந்ததும் கோபம் தலைக்கேறி, கர்ணனைக் கேலி செய்து புறக்கணிக்கும் காட்சியில் சிவாஜியுடன் போட்டிபோட்டு நடித்திருப்பார். சிவாஜியைத் திட்டுவதுபோல் உள்ள கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சிவாஜியிடமே கேட்டிருக்கிறார் இயக்குநர் பி.ஆர். பந்துலு. “ஓ.ஏ.கே தேவரைத் தவிர அந்த வேடத்தில் வேறு யாரைப் போட்டாலும் எடுபடாது” என சிவாஜி சொல்லியிருக்கிறார்.
விட்டுக்கொடுத்த எஸ்.எஸ்.ஆர்.
ஓ.ஏ.கே. தேவர் தனது குரு சக்தி வி. கிருஷ்ணசாமி எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்போம்மன் நாடகத்தில் சிவாஜியைப் போலவே வீரபாண்டிய கட்டப்பொம்மன், வெள்ளையத் தேவன், உமைத்துரை ஆகிய எல்லா முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமாகத் தயாரானபோது அதில் தேவருக்கு வேடம் இல்லை. உமைத்துரை வேடத்தை எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு ஒதுக்கியிருந்தனர். அவரும் ஏற்றுக்கொண்டார். படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று எஸ்.எஸ்.ஆர். கேட்க, அதில் ஓ.ஏ.கே. தேவருக்கு இடமில்லை என்றதும் கோபமாகிவிட்டார். “என் கேரக்டரை அவருக்கு கொடுங்க. அவர் இல்லாமல் வீரபாண்டிய கட்டப் பொம்மனா?” என்று தனது கதாபாத்திரத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.
இளையராஜாவுக்கு நாடக வாய்ப்பு
எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் ஓ.ஏ.கே. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ உட்பட பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இளையராஜா.
ஆனால் வாய்ப்பு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய தயாரிப்பன ‘மாசற்ற மனம்’ நாடகத்தைத் திருச்சியில் அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன். பாவலர் சகோதர்களின் இசையை கம்யூனிஸ்ட் மேடைகளில் கேட்டிருந்த தேவர், உடனே சம்மதம் தெரிவித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.
இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.
எம்.ஜி.ஆர். கண்ட ஆதித்த கரிகாலன்
எம்.ஜி. ஆருடன் ‘பறக்கும் பாவை’, ‘விக்ரமாதித்தியன்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தாய்க்குப் பின் தாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் தேவர். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரே தயாரித்து, நடித்து, இயக்குவதாகத் திட்டமிடப்பட்டபோது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தானே ஏற்க விரும்பியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதேபோல் குந்தவையாக வைஜெயந்திமாலா, அருண்மொழி வர்மனாக ஜெமினி கணேசன், வானதியாக பத்மினி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆட்களைத் தேர்வு செய்தவர் ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்துக்குத் தன்னைத் தேர்வு செய்திருந்ததை ஓ. ஏ. கே. தேவர் தன் நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்.
மார்டன் தியேட்டரில் பணியாற்றும்போதே கலைஞர் மு.கருணாநிதி மீது தோழமை கொண்ட தேவர், கலைவாணரின் மறைவுக்குப் பிறகு அவருடன் மேலும் நெருக்கமானார். கலைஞர் கதை, வசனம் எழுதி வெற்றிபெற்ற ‘குறவஞ்சி’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்தார். 1972 ல் தனது 48-வது வயதில் மறைந்த ஓ.ஏ.கே. தேவர், கடைசி வரை திமுகவின் மேடைகளில் பிரச்சார நட்சத்திரமாகவும் விளங்கினார். எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த நட்பை மாற்றிக்கொள்ளவில்லை. தேவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த முதலில் வந்தவர் எம்.ஜி.ஆர்.
தேவர் கடைசியாக நடித்த படங்கள் ‘வாழையடி வாழை’, ‘சிசுபாலன்’. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாக்தாத் பேரழகி’. தந்தையின் வழியில் நின்று திரை நடிப்பைத் தொடர்ந்துவருகிறார் அவரது மகன்களில் ஒருவரான ஓ.ஏ.கே. சுந்தர்.
ஆதி பராசக்தி படத்தில் ஒரு சுவையான காட்சி. ஓ.ஏ.கே.தேவரும் ஏ.கருணாநிதியும் பங்கு கொண்டது. சும்பன் ஓ.ஏ.கே.தேவர், நிசும்பன் ஏ.கருணாநிதி. சும்பன் அண்ணன் – நிசும்பன் தம்பி.
சும்பனும் நிசும்பனும் 15 வருடங்கள் கடும் தவம்புரிந்து பிரம்மாவிடம் ஒரு வரம் வாங்கிவிடுகின்றனர். அதாவது அவர்களாகவே அவர்களை அழித்துக் கொண்டாலொழிய வேறு எவராலும் இவர்களை அழிக்க முடியாது என்பது தான் அந்த வரம். அதனால் வரத்தைக் கொடுத்த பிரம்மா,விஷ்ணு,எமதர்மன் முதல் அத்தனை பேரையும் ஆட்டிப்படைக்கின்றனர் இருவரும். இதற்கு முடிவுகாண அன்னை ஆதிபராசக்தியை நாடுகின்றனர் பிரம்மாவும் மற்றவர்களும். அதைக் கேட்டு ஆதி பராசக்தி அழகான ஒரு பெண்ணாக உருமாறி (வாணிஸ்ரீ) நடனமாடுவதற்காக சும்பன் – நிசும்பன் அவைக்கு வருகிறார். நடனதாரகையைப் பார்த்த இருவரும் அப்பெண்ணை அடைந்துவிடவேண்டுமென போட்டி போட்டு துடிக்கின்றனர். அப்போது சும்பனும் நிசும்பனும் உரையாடும் காட்சி.
நிசும்பன் (ஏ.கருணாநிதி):-
ஆ அஹ்ஹஹ்ஹா……வந்தார்கள் மடையர்கள்
சும்பன் (ஓ.ஏ.கே.தேவர்):- மடையர்கள் கடைமடையர்கள்
சும்பன்:-
தம்பி இந்தப் பெண்ணை பேயென்று சொன்ன காவலாளிகளுக்குக் கடுமையான தண்டனைக் கொடுத்துவிட்டு வா…போ…போ….
நிசும்பன்:- தாங்கள்
சும்பன்:- நான் இங்கிருந்தபடியே இவளைக் கண்காணித்துக் கொள்கிறேன்.
நிசும்பன்:- சும்பண்ணா……..
சும்பன்:- தம்பி….
நிசும்பன்:-
இன்று வரை எல்லா கட்டளைகளையும் தாங்கள் தானே இட்டுக் கொண்டு வருகிறீர்கள். அதன் பிரகாரம் இந்தக் கட்டளையையும் தாங்களே இடுங்கள் அண்ணா… போங்கள் அண்ணா போங்கள் அண்ணா…
சும்பன்:- நீ….
நிசும்பன்:-நான் இங்கிருந்தபடியே அந்தப்பெண்ணைக் கண்காணித்துக் கொள்கிறேன்.
சும்பன்:- தம்பீ….
நிசும்பன்:- அண்ணா…..
சும்பன்:- இப்படி இப்படி…. புரிகிறதடா உன் எண்ணம்…..
நிசும்பன்:-
எனக்கும் புரிகிறது உங்கள் எண்ணம்.. சுருக்கமாகச் சொல்கிறேன். அந்தப் பெண்ணை முதலில் பார்த்தவன் நான். ஆகவே எனக்குதான் அவள் சொந்தம்.
சும்பன்:-
ஆ .. கண்டுவிட்டால் மட்டும் உனக்கு அவள் சொந்தமாகிவிடுவாளோ? இந்தப் பெண்ணை முதலில் காதலித்தவனே நான்தான்.
நிசும்பன்:-
காதலா? அந்தப் பெண்ணைக் கண்ட மறுகணமே தாரமாக எண்ணிவிட்டேன். தம்பியின் தாரத்தை இம்சிப்பது மகா பாவம் அண்ணா.
சும்பன்:- டேய்ய்ய்ய்….
நிசும்பன்:- ம்ம்ம்ம்ம்….
சும்பன்:-இனி ஒரு தரம் அவளை தாரம் என்று நீ சொன்னால் உன் சிரம் உன் கழுத்திலிருக்காது.
நிசும்பன்:- அதுவரை என் கரம் பூப்பறித்துக் கொண்டிருக்குமோ?
சும்பன்:- போடா சின்னப்பயலே….
நிசும்பன்:- நீ போடா சும்பா…
சும்பன்:- அட மூடா கொஞ்சம்கூட அண்ணன் என்ற மரியாதை இல்லாமல்
நிசும்பன்:-
பெண்கள் விஷயத்தில் அண்ணனாவது தம்பியாவதுடா மடையா… இவளை அடைவதற்காக நான் எந்த முடிவிற்கும் துணிந்துவிட்டேன். ஓடிவிடு.
சும்பன்:-ஹ..ஓடுவதா அடேய் இவளை நான் தான் அடையப்போகிறேன். உன்னால் ஆனதைப்பார்.
நிசும்பன்:-முதலில் இந்த வாளுக்குப் பதில் சொல்லிவிட்டு அப்புறம் நெருங்கு அவளை.
இருவரும் ஒருவருக்கொருவர் வாளால் சண்டையிட்டு முடிவில் ஒருவரையொருவர் வாளால் குத்திக்கொண்டு மடிகின்றனர். ஆதி பராசக்தி சிரிக்கிறாள்.
இந்தக் காட்சியில் இருவரும் கனகச்சிதமாக தத்தமது திறமையைக் காட்டியிருப்பார்கள்.
OAK.Thevar- The famous Villain,Comedy and Charactor Actor in Thamizh Films.
“மூன்றெழுத்து” 1968 படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
“தாய் மேல் ஆணை” படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
உலகம் இவ்வளவு தான் படத்தில் நாகேசுடன் ஓ.ஏ.கே.தேவர்
தாயின் மேல் ஆணை படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
தாயின் மேல் ஆணை படத்தில் சிவசூரியன் மற்றும் சி.கே.நாகேசுடன் ஓ.ஏ.கே.தேவர்
அன்பு வழி படத்தில் ரி.எஸ்.முத்தையாவுடனும் தனித்தும் ஓ.ஏ.கே தேவர்
சின்னஞ்சிறு உலகம் (1966) படத்தில் தேவர்
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) படத்தில்
இடமிருந்து ஓ.ஏ.கே.தாவர், பூங்காவனம் சந்தானம், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஏ,கருணாநிதி
கப்பலோட்டிய தமிழன் படத்தில் தேவர்
நான் யார் தெரியுமா [1973] படத்தில் ஓ.ஏ.கே.தேவர் மாஜிக் ராதிகா மற்றும் விஜயஸ்ரீயுடனும்
1971-இல் ’வெளிவந்த மகத்தான படைப்பான ‘ஆதி பராசக்தி’ படத்தில் சும்பன் என்ற கதாபாத்திரத்தில் ஓ.ஏ.கே.தேவரும் நிசும்பன் என்ற கதாபாத்திரத்தில் ஏ.கருணாநிதியும்
பாக்தாத் பேரழகி [1973] படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
பாக்தாத் பேரழகி [1973] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் ஜெயசுதா
பாக்தாத் பேரழகி [1973] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் ரவிச்சந்திரன், நாகேஷ்
“பொம்மலட்டம்’ [1968] படத்தில் ஓ.ஏ.கே.தேவரும் மேஜர் சுந்தரராஜனும்
‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் எஸ்.ராமாராவ்
‘கண்கண்ட தெய்வம்’ [1967] படத்தில் கண்ணன், ஓ.ஏ.கே.தேவருடன் எஸ்.ராமாராவ்
“கல்யாணியின் கணவன்” [1963] படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
“மாமன் மகள்” [1950] படத்தில் ஜே.பி.சந்திரபாபு, ரி.எஸ்.பாலையாவுடன் ஓ.ஏ.கே.தேவர்
”அலிபாபாவும் 40 திருடர்களும்” [1956] படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
”அலிபாபாவும் 40 திருடர்களும்” [1956] படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் ஓ.ஏ.கே.தேவர்
”அலிபாபாவும் 40 திருடர்களும்” [1956] படத்தில் கே.ஏ.தங்கவேலு, பி.எஸ்.வீரப்பாவுடன் ஓ.ஏ.கே.தேவர்
“பிள்ளை செல்வம்” [1974] படத்தில் மேஜர் சுந்தரராஜன் , ஆர்.எஸ்.மனோகருடன் ஓ.ஏ.கே.தேவர்
“மனசாட்சி” [1969] படத்தில் குமாரி சரளாவுடன் ஓ.ஏ.கே.தேவர்
“மனசாட்சி” [1969] படத்தில் ஜெய்சங்கருடன் ஓ.ஏ.கே.தேவர்
“நான்கு சுவர்கள்” [1971] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் ஸ்ரீவித்யா
“நான்கு சுவர்கள்” [1971] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் ஆர்.எஸ்.மனோகர்
“நான்கு சுவர்கள்” [1971] படத்தில் ஓ.ஏ.கே.தேவர், ஒரு விரல் கிருஷ்ணாராவ், வி.எஸ்.ராகவன், ரவிச்சந்திரனுடன் ஜெய்சங்கர்
”தலைவன்” [1970] படத்தில் ஜெயபாரதியுடன் ஓ.ஏ.கே.தேவர்
“கங்கா கவுரி” [1973] படத்தில் சனீஸ்வரனாக ஓ.ஏ.கே.தேவர்
“கங்கா கவுரி” [1973] படத்தில் சோவுடன் ஓ.ஏ.கே.தேவர்
“கங்கா கவுரி” [1973] படத்தில் ஜெமினி கணேசனுடன் ஓ.ஏ.கே.தேவர்
“ராஜா ராணி” [1956] படத்தில் சிவாஜிகணேசனுடன் ஓ.ஏ.கே.தேவர்
“சிசு பாலன்” [1974] படத்தில் ஆர்.எஸ்.மனோகருடன் ஓ.ஏ.கே.தேவர்
“சௌபாக்கியவதி” [1957] படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
“சௌபாக்கியவதி” [1957] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் சாவித்திரி, சாண்டோ கிருஷ்ணன், முத்துலட்சுமி.
“சௌபாக்கியவதி” [1957] படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் ஜெமினி கணேசன், முத்துலட்சுமி, சாவித்திரி
”காத்தவராயன்” [1958] படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
“அடிமைப் பெண்” 1969 படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
“அடிமைப் பெண்” 1969 படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் ஓ.ஏ.கே.தேவர்
“அடிமைப் பெண்” 1969 படத்தில் சி.எஸ்.பாண்டியன், சீதாலட்சுமியுடன் ஓ.ஏ.கே.தேவர்
”ஹரிச்சந்திரா” 1956 படத்தில் கனகஸ்ரீயுடன் ஓ.ஏ.கே.தேவர்
”ஹரிச்சந்திரா” 1956 படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் ஜி.வரலட்சுமி
”சர்வாதிகாரி” 1951 படத்தில் ஒ.ஏ.கே.தேவர்
“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் ஏ.கருணாநிதி
“படித்தால் மட்டும் போதுமா” 1962 படத்தில் ஓ.ஏ.கே.தேவருடன் சிவாஜிகணேசன்
“நானே ராஜா” 1956 படத்தில் ஓ.ஏ.கே.தேவர்
”காலம் வெல்லும்” 1970 படத்தில் யூசுப்புடன் ஓ.ஏ.கே.தேவர்
”காலம் வெல்லும்” 1970 படத்தில் வாசுவுடன் ஓ.ஏ.கே.தேவர்
”காலம் வெல்லும்” 1970 படத்தில் சுருளிராஜன், வாசுவுடன் ஓ.ஏ.கே.தேவர்
”காலம் வெல்லும்” 1970 படத்தில் சுருளிராஜன், ஜெய்சங்கருடன் ஓ.ஏ.கே.தேவர்101
“கைதியின் காதலி” 1963 படத்தில் எல்.விஜயலட்சுமியுடன் ஓ.ஏ.கே.தேவர்
“கைதியின் காதலி” 1963 படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ஓ.ஏ.கே.தேவர் .
“கைதியின் காதலி” 1963 படத்தில் ஆர்.பக்கிரிசாமியுடன் ஓ.ஏ.கே.தேவர் .106
குரல்வளத்தையும் காட்சிகளையும் காண சொடுக்குங்கள் http://www.youtube.com/watch?v=NJni08Adjro
ஒ ஏ கே தேவர் ஒரு வில்லன் நடிகர்.
குரல் ‘கணீர்’ என இருக்கும்.
” வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை ” என்ற அவர் வசனம் ‘மஹாதேவி ‘ யில் பிரபலம்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் ஊமைத்துரை.
‘சாது மிரண்டால்’ படத்தில் நாகேஷுடைய டாக்ஸியில் டி.ஆர்.ராமச்சந்திரனால் சுடப்பட்டு இடைவேளைக்கு பின் பிணமாகவே டாக்ஸியில் கலக்குவார்!
மதறாஸ் டு பாண்டிச்சேரி – ஓட்டல் நடத்தும் ஐயராக வந்து பிராமண பாஷை பேசுவார்.
‘நான் யார் தெரியுமா’ ஜெய்சங்கர் படத்தில் வில்லன்.
அதில் ஒ.ஏ.கே தேவர் வசனம் ‘ஒரே கல்லு! நாலு மாங்காய்!’
சோ பெண் வேடமிட்டு ” கை படாத ரோஜா பூ நானே தான்! காத்திருக்கும் கருவண்டு நீயே தான்!” பாட்டு பாடும்போது தேவர் ‘சைட்’ நொறுக்குவார்!
‘தங்கச்சுரங்கம்’ சிவாஜி படத்தில் வில்லன்.
1971 தேர்தலில்
சிவாஜி கணேசன் “ நடிப்பில் சந்திப்போமா? வீரத்தில் சந்திப்போமா?” என்று எம்.ஜி.ஆருக்கு பகீரங்க சவால் விட்டார்.
எம்.ஜி.ஆர் இதற்கு பதில் சொன்னார்.
” தம்பி கணேசன் நடிப்பில் சந்திப்போமா? என்று என்னைப் பார்த்துக்கேட்கிறார்.நடிப்பில் என்னுடைய பாணி வேறு.அவருடைய பாணி வேறு என்பது அனைவருக்கும் தெரியும்.ஏன் என் தம்பிக்கே தெரியும்.பின் ஏன் என்னை அவர் நடிப்புக்கு சவால் விட்டுக் கூப்பிடவேண்டும்.ஒரு வேளை ’சிவந்த மண்’ படத்தில் இவரை விட நண்பர் முத்துராமன் சிறப்பாக நடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்களே! அதனால் சிவாஜிக்கு தன் நடிப்பில் சந்தேகம் வந்து விட்டது போலும்! (இந்த இடத்தில் சற்று நிறுத்தி எம்.ஜி.ஆர் சொன்னார்)
வீரத்தில் சந்திப்போமா என்று கேட்கிறார்! ஐயோ பாவம்!”
கடலலையெனத்திரண்டிருந்த கூட்டத்தின் சிரிப்பும் ஆரவாரமும் அளவிடமுடியாதபடி நீண்ட நேரம் நீடித்தது.
’தங்கச்சுரங்கம்’ படத்தில் சிவாஜிக்கு வில்லனாக நடித்த ஓ.ஏ.கே தேவர் திமுக மேடையொன்றில் “ கணேசா! நீ முதலில் என்னுடன் நடிப்பில் மோதிப்பார்.’ என்று எதிர் சவால் விட்டார்.
1973ம் ஆண்டு மறைந்து விட்டார். இவர் மகன் தான் ஒ.ஏ.கே.சுந்தர்.
ஒ.ஏ.கே தேவர் அந்த காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் இவரோடு ராயப்பேட்டையில் ஒரு கவிஞர் ஒரே அறையில் தங்கியிருந்தார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!
நிர்ப்பந்தமான ஒரு சூழலில்
( பணத்தட்டுப்பாடு தான்! காச்சப்பாடு! )ஒரு தடவை
ஒ.ஏ.கே.தேவர் அறையிலிருந்த புத்தகம் பேப்பரை எல்லாம் எடைக்கு போட்டு காசு வாங்கி விட்டார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வந்து பார்க்கிறார்.
இவர் எழுதிய பல கவிதைகளையும் தேவர் வீசைக்கு பேப்பர்க்காரனிடம் போட்டு விட்டதை கண்டறிந்து பதறி வேதனைப்படுகிறார். ”அட, ‘மடை’ மாயி…. ”
ஒ.ஏ.கே.தேவர் அவரை தேற்றி ஆறுதல் சொன்னாராம்.
” இதை விட நீ நல்லா நிறைய கவிதை எழுதிடுவே. கவலைப்படாத கல்யாணி. ஒன் மூளைக்கு பிரமாதமா நீ எழுதுவே பாரு ! பேப்பர்காரனாவது காசு கொடுத்தானேன்னு நாம சந்தோசப்படனும்.. ”
Down to Earth!
அருமையாக இருக்கிறது திரு.சேதுராமன். மிக்க நன்றி.
தேவர் அறிமுகமான படம் ‘மாமன் மகள்’ என்பது தவறு. மாமன் மகள் 1955 இல் வெளியான படம். அதற்கு முன்னதாக Modern Theatres படங்களான ‘பொன்முடி'[1950], ‘திகம்பர சாமியார்'[1950], சர்வாதிகாரி'[1951], சுகம் எங்கே?'[1954], ‘மகேஸ்வரி'[1955] முதலான படங்களில் அவர் நடித்துள்ளார். ‘மகேஸ்வரி’ ‘மாமன் மகள்’ வெளியாகி ஒரு மாதத்தின் பின் வெளியானது. எவ்வாறிருப்பினும் அவர் அறிமுகமான முதற் படம் ‘பொன்முடியே;! அதே போல அவரது இறுதிப் படமாக ‘பாக்தாத் பேரழகி’ குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் அது வெளியான அதே தினத்தில் தான் ‘பூக்காரி’யும் வெளியானது. ஆயினும் அவை வெளியான 1973 க்கு அடுத்த ஆண்டில் 1974 இல் வெளியான ‘பிள்ளைச் செல்வமே’ அவர் நடிப்பில் வெளியான கடைசிப்படம். அவர் நடித்து வெளி வந்த சிவாஜியின் ஹரிச்சந்திரா’ 1956 இல் வெளிவரவில்லை. 1968 இல் தான் வெளியானது.